லவ் பேட் - பட்ஜிரிகர்
உலகின் செல்லப்பிராணிகளின்
வரிசையில் மூன்றாவது இடத்தை இந்த லவ்பேட்ஸ் பறவைகள் பிடித்துள்ளன. முதல் இரண்டும் நாய், பூனை என்பனவாகும்.
லவ்பேட் என்பது இப்பறவை இனங்களின் செல்லப் பெயர்தான். ஆனால் அவற்றின் உண்மையான பெயர்
பட்ஜ்ரிகர் (Budgerigar) ஆகும். Melopsittacus undulates என்பது இதன் விஞ்ஞானப்
பெயர். மற்றைய பறவையினங்களுக்கு வைத்திருக்கும் பெயரைவிட இதன் பெயர் சற்று வித்தியாசம்தான்.
லவ்பேட் - காதல் பறவை. காதலின் சின்னமாகவும் இப்பறவை கருதப்படுகின்றது. லவ்பேட்… லவ்பேட்… என்று பழைய காலப்
பாடல் ஒன்றும் உள்ளது. இப்பறவையினங்களின் குரும்புத்தனமான சேட்டைகளும் துரு துரு வென்ற
உட்சாகமும் கீச் கீச் என்ற சப்தமும் பல வர்ண நிறமும்தான் அவை செல்லப் பிராணியாக வளர்க்கப்படக்
காரணம். 1805 ஆம் ஆண்டில்தான்
இப்பறவையினம் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தொடரில் லவ்பேட் பறவையினங்களின் வாழ்க்கையின்
சுவாரஷ்யமான பக்கங்களைப் படித்துப் பார்ப்போம்.
வாழும் இடங்கள்.
லவ்பேட் பறவைகளின் வாசஸ்தளம்
அவுஸ்ரேலியா. அங்குள்ள உலர் நிலங்களிலும் புற்தரைகளிலும், அடர் மர நிலங்களிலும்
இவை சுதந்திரமாக வாழ்கின்றன. வேறு நாடுகளில் வனப்பகுதிகளில் இவற்றைக் காண்பது கடினம்.
கடும் குளிர், கடும் உஷ்னப் பிரதேசங்கள்
தவிர்ந்த ஏனைய எந்தப் பகுதியிலும் வாழும் தகைமை பெற்றவைதான் இந்தப் பறவைகள். வனப் பகுதிகளில்
வாழும் இந்த லவ்பேட்கள் பச்சை மற்றும் அதில் மஞ்சள், கருப்பு நிறக் கோடுகள் கொண்டவையாக இருக்கும். அவற்றைப்
பிடித்து ஆய்வு கூடங்களில் கலப்பு இனப்பெருக்கம் செய்துதான் தற்போது பல வண்ண நிறங்களில்
லவ்பேட் பறவைகளைக் காண முடிகின்றது. இச் செயன்முறை 1850 ஆண் ஆண்டு முதல் ஆரம்பமானது. வண்ணங்கள் நிறைந்துள்ள
லவ்பேட்களை இன்று காடுகளில் காண முடியாது. அவை வீடுகளில்தான் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுகின்றன.
வீடுகளில் மட்டுமல்லாது அதிகமான நாடுகளில் பண்ணைகளிலும் விற்பனைக்காக இவை ஆயிரக் கணக்கில்
வளர்க்கப்படுகின்றன.
உடல் அமைப்பு.
இவை கிளி இனத்தைச் சார்ந்தவை
என்பதால் உடற் தோற்றமும் கிளிகளைப் போன்றே இருக்கும். வளர்ந்த லவ்பேட் பறவை ஒன்று 18 செ.மீ. நீளமும் 30-40 கிராம் பாரமும் கொண்டிருக்கும்.
இரு பக்க சிறகுகளை அகல விரித்தால் 30 செ.மீ. நீளம்வரை விரியும். சுமார் எட்டு வருடங்கள்வரை உயிர்
வாழும். கிளிகளது அலகின் அமைப்பில் சிறிய கூர்மையான அலகும், அலகின் மேல் இரண்டு
துவாரங்களில் மூக்கும் இரு பக்கமாக இரண்டு சிறிய கண்களும் இரு துளைத் துவாரக் காதுகளும்
அவற்றுக்கு உண்டு. சிரிய தலை நீண்ட உடல் மெல்லிய இரண்டு கால்கள் பின்னால் நீண்ட வால்
அத்தோடு இருபக்கமும் இரண்டு சிறகுகள் இப்படியான தோற்றத்தைக் கொண்டவைதான் லவ் பேட் பறவைகள்.
இவற்றை நிற அடிப்படையில் பிரதானமாக இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று வெள்ளை நிறச் சார்புடையவை.
(white-based) இதில் கடும் நீலம், இளம் நீலம், ஊதா, சாம்பல் மற்றும் வெள்ளை
என்ற நிறப் பறவைகள் வரும். இரண்டாவது மஞ்சள் நிறச் சார்புடையவை (yellow-based). இதில் பச்சை, சாம்பல் பச்சை மற்றும்
மஞ்சள் நிறப் பறவைகள் உள்ளடங்கும். இவை தனி நிறங்களைக் கொண்டனவாகவோ அல்லது கலவை நிறங்களைக்
கொண்டனவாகவோ இருக்கும். அத்தோடு தனி நிறத்தில் சிவப்புக் கண்களைக் கொண்ட லவ்பேட் பறவைகள்
மிக அரிதாக இருக்கும் என்பதோடு அவை விலையும் அதிகம். இன்று பொதுவாக 32 நிற அமைப்பைக்கொண்ட
லவ்பேட் வகைகளைக் காண முடியும்.
வீட்டில் வளர்க்கும் முறை.
லவ்பேட் வளர்ப்பதற்கு பெரிய
இடம் தேவையில்லை. அவை சிறிய பறவைகள் என்பதால் சிறிய இடம் இருந்தாலே போதும். மூன்று
அடி நீலம், மூன்று அடி அகளம்
ஐந்து அடி உயரம் கொண்ட ஒரு சிரிய கூட்டினைத் தயாரித்துக்கொள்ளலாம். இந்த அளவு கூட்டுக்குள்
பத்து பறவைகளைக்கூட வளர்க்கலாம். அவை சுற்றிப் பறப்பதற்கு இடம் வைத்துவிட்டு இரண்டு
மூன்று கம்புகளை குறுக்கும் நெடுக்குமாக வைத்தால் அதில் அவை நின்றுகொள்ளும். அவ்வாறே
சிறிய ஊஞ்சல் ஒன்றும், கயிரொன்றையும் தொங்கவிட்டால்
அதில் அவை ஆடி, தொங்கி விளையாடுவதையும்
பார்த்து ரசிக்கலாம்.
இணப் பெருக்க காலத்தில் அவை
முட்டையிட்டு அடை காப்பதற்கு சிறிய மண் முட்டிகளை அல்லது தேங்காய் மட்டைகளை வைக்கவேண்டும்.
கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பலகைப் பெட்டியோ, கார்ட்போட் பெட்டிகளோ
இதற்கு சரிவராது. அவற்றில் முட்டையிட்டாலும் முட்டை ஓரிடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும்
உருண்டு அசைய வாய்ப்புள்ளதால் முட்டைகள் பழுதடைந்துவிடும். மண் முட்டியில் லவ்பேட்
பறவைக்கு உள்ளே சென்று வரும் அளவுக்கு சிறிய துவாரம் இட்டு கூட்டின் ஒரு மூலையில் கட்டி
விட்டால் முட்டையிடும் காலத்தில் அவை அதனுள் சென்று முட்டையிட்டு அடைகாக்கும்.
உணவு முறை
லவ்பேட் பறவைகள் தாணியம் உண்பதை
மிகவும் விரும்புகின்றன. அதிலும் பஜ்ரி விதைகள் என்றால் அலாதிப் பிரியம். இன்னும் நெல்
விதைகள், கோதுமை, பருப்பு, அரிசி சோளம் என்பவற்றை
இவை விரும்புகின்றன. இவை அனைத்தும் கலந்த உணவு வளர்ப்புப் பிராணி உணவுக் கடைகளில் விற்பனைக்கு
உண்டு. இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கூண்டுக்குள் வைத்தால் பறவைகள் பறந்து வந்து
உண்ண ஆரம்பிக்கும். இன்னும் கீரை வகைகளையும் இவை விரும்பி உண்கின்றன. பொன்னாங்கன்னி, கங்குன் கீரை, பசளிக் கீரை, முடக்கத்தான் போன்ற
கீரைகளையும் கூண்டுக்குள் வைத்தால் உண்ணும். பிஸ்கட், பான் மட்டைகளையும்
விரும்பி உண்ணும்.
சுத்தமான தண்ணீர் வைப்பதற்கும்
ஒரு பாத்திரம் வேறாக வைக்கவேண்டும். மிகவும் ஆழமில்லாத நின்று நீர் பருக முடியுமான
பாத்திரம் வைக்கவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் குளிக்கும் வழக்கம் இப்பறவைகளுக்கு
உண்டு. நீர்ப் பாத்திரத்தின் விளிம்பில் நின்று உடலை சிலிர்த்துக்கொண்டு தண்ணீரில்
உடலை நனைத்துக் குளித்துவிட்டு வெயில் காயும். அதேபோன்று விட்டமின்களையும் சரியாகக்
கொடுக்கவேண்டும். மாதம் ஒரு வாரம் விட்டமின் சீ, விட்டமின் பீ, விட்டமின் ஈ என்பவற்றை ஒரு நாள் விட்டு ஒரு நாள்
குடிப்பதற்கு வைக்கும் தண்ணீரில் கரைத்து வைத்துவிட்டால் நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும். இவற்றை முப்பது ரூபாவிற்கு பாமசியில் வாங்கலாம்.
அத்தோடு மறவாமல் கணவா மீனின் மண்டை ஓடொன்றையும் (Cuttlebone) கட்டித் தொங்கவிடுங்கள். அப்போது
அதனைக் கொத்தி கொத்தி தமது அலகைத் தீட்டி கூர்மையாக்கிக்கொள்ளும். அலகு தொடர்ந்து நீண்டு
வளராமல் தீட்டி கட்டுப்படுத்திக்கொள்ளும்.
மேலும் அதில் கல்சியம் இருப்பதால் முட்டையின் ஓடுகள் பலமடையும். இணவிருத்தி
நன்கு நடக்கும். வீட்டுக்குக் கொண்டு வரும் கோழி முட்டையின் ஓட்டையும் கழுவி சுத்தம்
செய்து லவ்பேட் கூட்டுக்குள் வைய்யுங்கள். அதிலும் கல்சியம் இருக்கின்றது.
குடும்ப வாழ்க்கை
லவ்பேட் பறவைகளின் குடும்ப
வாழ்க்கை அழகானது. முதன் முதலில் இணை சேரும் ஆண், பெண் பறவைகள் இறுதிவரை பிரியாது. ஒன்று ஒன்றுடன்தான்
குடும்ப உறவில் ஈடுபடும். பிறந்து நான்கு மாதங்களில் பருவத்தை அடைந்து தனக்கான துணைப்
பறவையைத் தேடிக்கொள்ளும். பின்னர் நாம் அவற்றின் கூண்டுக்குள் வைத்திருக்கும் மண் முட்டியை
இரண்டு பறவைகளும் சேர்ந்து சென்று, அலசி, ஆராய்ந்து பொருத்தம் பார்த்து தெரிவுசெய்துகொள்ளும். முட்டைக்கான
இடம் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இரண்டும் இணை சேரும். இணை சேரும்போது ஒன்று மற்றொன்றின்
தலையை அலகினால் கோதிவிடுவதும், ஒன்று மற்றொன்றுக்கு உணவூட்டிவிடுவதும் விளையாடுவதும் அவற்றின்
அன்பு வாழ்க்கையைக் காட்டுகின்றன. இணை சேர்ந்து ஒரு வாரத்திற்குள் முட்டைகளை இடும்.
சுமார் ஐந்து முதல் எட்டு முட்டைகள் வரை இடும். ஒரு முட்டை 2 செ.மீ. நீளம் இருக்கும்.
அதன் பின்னர் பெண் பறவை 21 நாட்கள் தொடர்ந்து
அடைகாக்கும். அடைகாக்கும்போது பெண் பறவைக்கான உணவு, நீர் என்பவற்றை ஆண் பறவையே பரிமாறும். அரிதாகவே
பெண் பறவை வெளியே வரும். இவ்வாறு ஒன்றன் மீது ஒன்று இத்துனை அன்புடன் வாழ்க்கை நடாத்துகின்றன.
இதனால்தான் அவற்றுக்கு காதல் பறவை – Love Bird என்று சொல்லப்படுகின்றது.
ஆண், பெண் பறவைகளை இனங்கானல்.
லவ்பேட் பறவையில் ஆண், பெண் பறவைகளை இணங்காண்பது
எப்படி? என்பது அனேகமானவர்களின்
கேள்வி. வெகு சுலபம். ஆண் பறவையாயின் அதன் மூக்குப் பகுதி நல்ல நீல நிறத்தில் தெளிவாக
விளங்கும். ஆனால் பெண் பறவையின் மூக்கு வெளிர் நிறத்தில் நிறமற்று இருக்கும். ஆண் பறவையின்
கழுத்து, நெஞ்சுப் பகுதிகளில்
கருப்புப் புள்ளிகள் மாலை போன்று இருக்கும். பெண் பறவையில் அப்படி இருக்காது. இவற்றை
வைத்தும் அவற்றின் உடலமைப்பு, தலையின் அமைப்பு என்பவற்றை வைத்தும் ஆண், பெண் பறவைகளை இனங்காணலாம்.
லவ்பேட் குஞ்சுகள்
இருபது, இருபத்தி ஒரு நாட்கள்
கடந்ததும் முட்டைகளிலில் இருந்து குஞ்சு லவ்பேட் பறவைகள் வெளிவரும். கண்கள் திறக்காத, மயிர்கள் வளராத தோற்றத்தில்
அவை இருக்கும். ஐந்து அல்லது எட்டு முட்டைகளில் மூன்று அல்லது நான்கு குஞ்சுகள்தான்
வெளிவரும். மற்றப் பறவைகள் கூண்டை அண்டாது தந்தைப் பறவை காவல் புரியும். இல்லையேல்
மற்ற லவ்பேட் பறவைகள் பொறாமைத்தனத்தில் குஞ்சுப் பறவைகளை தலையில் கொத்தி கொலை செய்யும்
சந்தர்ப்பங்களும் உண்டு. முட்டை இடுவதற்கான மண் முட்டிகள் போதாதிருந்தால் அதனைக் கைப்பற்றுவதற்காக
சண்டைகளும் நடந்து இரத்தம் வரும்வரை, சிலபோது சாகும் வரை மூர்க்கமாகச் சண்டை பிடித்துக்கொள்ளும்.
எனவே போதுமான அளவு மண் முட்டிகளை வைக்கவேண்டும். பிறந்து ஒரு மாதத்தில் குஞ்சுகளது
இறகுகள் எல்லாம் நன்கு வளந்துவிட்டபின்பு தாய், தந்தைப் பறவைகள் உணவூட்டுவதைக் குறைத்து முட்டியிலிருந்து குஞ்சுகளை
வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும். சிலபோது முட்டியிலிருந்து கீழே தள்ளிவிடும்.
அல்லது உணவுக்காக குஞ்சுகளே வெளியே குதித்துவிடும். முட்டியைவிட்டு வெளியே வந்தபின்பு
மீண்டும் ஓர் இரு நாட்களுக்கு தாய், தந்தைப் பறவைகள் உணவூட்டுவதோடு மற்ற பெரிய லவ்பேட் பறவைகளிலிடமிருந்தும்
குஞ்சுகளைப் பாதுகாக்கும்.
மீண்டும் இணப்பெருக்கம்
பெரிய பறவைகள் மீண்டும் முட்டையிட்டு
குஞ்சுகளைப் பெருக்கும் பணியை ஆரம்பிக்கும். முன்னைய குஞ்சுகளின் எச்சங்கள், அழுக்குகள், உடைந்த முட்டை ஓடுகள்
மண் முட்டியில் இருந்தால் முதலில் அவற்றைக் கால் நகங்களால் கிளரி, அலகினால் சுமந்து
வந்து முட்டியின் வெளியே கொட்டிவிடும். இவ்வாறு இடத்தை சுத்தப்படுத்தியதன் பின்னர்
மீண்டும் முட்டையிட ஆரம்பிக்கும். இப்படியே இவற்றின் வாழ்க்கை வட்டம் சுழல்கின்றது.
வருடக் கணக்காக பரம்பரை பரம்பரையாக கூண்டுகளில் அடைத்துவைத்தே இவை வளர்க்கப்பட்டு வந்ததனால்
தற்போது இருக்கும் லவ்பேட் பறவைகளால் சுதந்திரமாக காடுகளில் பறந்து திரிந்து உணவுகளைத்
தேடி உண்டு வாழ்ந்து பிழைப்பது கடினம். நீண் துரம் பறப்பதுகூட கடினம். விரைவில் களைப்படைந்துவிடும்.
அத்தோடு காகம் போன்ற பறவைகளால் இலகுவில் வேட்டையாடப்பட்டுவிடும். நீர் அருந்த தரைக்கு
இரங்கினாலும் ஆபத்துக்கள் அதிகம். எனவே சுதந்திரமாக வாழ்வதைவிட அனைத்துப் பராமரிப்புளும்
பாதுகாப்புகளும் இலவசமாகக் கிடைக்கின்ற எமது வீட்டில் உள்ள கூண்டுகளில் வாழ்வதே அவற்றுக்கு
மிகவும் உசிதமானது.
மனிதர்களோடு உள்ள உறவு
லவ் பேர்ட் பறவைளுக்கு தொடர்ந்து
உணவு, தண்ணீர் வைத்து வரும்போது
அவை எம்மீது பாசம் கொள்கின்றன. எம்ம்மைக் கண்டதும் க்ரீச் க்ரீச் என்று ஒலி எழுப்புகின்றன.
எம்மால் அவற்றுக்கு ஆபத்துக்கள் இல்லை என்பதை உணர்ந்தால் கைகளில்கூட வந்து நின்றுகொள்ளும்.
சில வார்த்தைகளைக்கூட பேசக் கற்றுக்கொள்ளும். விசில் அடிக்கும். அல்லாஹ்வின் படைப்பினங்கள்
அற்புதத்திலும் அற்புதமானவைதான். சுப்ஹானல்லாஹ்!















