அல்பட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்து உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிதான் “ஸ்டீபன் ஹாக்கிங்”. “பிரபஞ்சம் எதற்காகப் படைக்கப்பட்டது என்பதை நிச்சயமாக ஒரு நாள் எம்மால் கண்டறிய முடியும். அப்படிக் கட்டறிந்தால் அதுதான் மனித இனத்தின் மகத்தான கண்டுபிடிப்பாக இருக்கும்” என்றார்.
இப் பேரண்டத்தின் பிறப்புக்குத் துணையான அனைத்துச் சக்திகளையும் ஒருங்கிணைத்து ஒருமைச் சித்தாந்தத்தைக் கண்டறியவேண்டும் என்பதுதான் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கணவு. இதனை நனவாக்குவதனைத் தனது வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றார் பேராசிரியர் ஹாக்கிங். “இவ்வொருமைச் சித்தாந்தத்தைக் கண்டறிந்தால் விஞ்ஞானிகள், தத்துவமேதைகள், சிந்தனையாளர்கள், அறிவியல் விற்பன்னர்கள் யாவரும் சாதாரண மனிதர்களாகிவிடுவர்” என்பதாக அவர் கருத்துரைக்கின்றார்.
கடவுள் பற்றிய உமது கருத்தென்ன என்று ஒரு முறை அவரிடம் வினவப்பட்டபோது அதற்கு அவர் அளித்த பதில் “எனது நம்பிக்கையின்படி இப்பிரம்மாண்டமான, அற்புதமான இயற்கையின் விதிகளையே நான் இறைவன் என்கின்றேன்” என்றார்.
கடவுள் இல்லை என்று மறுப்பவர்களைவிட இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து வியக்கும் ஹாக்கிங் அவர்கள் இந்த பிரம்மாண்டமான இயற்கையின் பின்னாலுள்ள இறைவனை அறிந்துகொள்ளும் காலம் மிகத் தூரமில்லை என்றே நான் கருதுகின்றேன். இதற்கு அவரது வாழ்நாள் குறிக்கோளான “ஒருமைச் சித்தாந்தத்தைக் கண்டறிதல்” என்ற விடயமும்கூட ஒருவேளை ஏகத்துவச் சிந்தனையின்பால் அவரைக் கொண்டுவந்து சேர்த்தாலும் சேர்க்கலாம்.
அனைத்தையும் அறிந்தவன் அவனே!
ஆலிப் அலி (இஸ்லாஹி)






