உன்னோடு பேசவே
ஒரு பங்கு என் ஊதியம்
இணையத்திற்காக
நம் இணக்கத்திற்காக!
அள்ளிக்கொடுக்க
எண்ணுவேன் – மாதமானால்
இருந்தும் கிள்ளிக்கொடுக்க
எண்ணுவேன் பணத்தை!
விலங்கிடப்படாத கைதியாக நான் இங்கே
உன் நினைவுகளில்...
விடுதலைக்காக ஏங்குவேன்
விடுமுறைக்காகவும்!
இணைப்பு துண்டித்ததும்
இறுக்கமாக இருக்கும்
இதயத்திற்குள் புழுக்கமாகவும் இருக்கும்!
உன் நிழற்படங்கள்
நிழற்குடையாய்…
சூடான சுவாசங்கள்
கண்களை இறுக்கும்
கண்ணீர்த் துளிகள் தெறிக்கும்!
குரல் கேட்டாலும்
மடல் கேட்டு
அடம்பிடிப்பாய்
வரைந்து அனுப்பினால்
விரைந்து அழைப்பாய்
குரல் கேட்க வேண்டுமென்று
இறுதி இரண்டு வரிகள்
தெரியவில்லை என புகார் செய்வாய்
அழிந்த எழுத்துக்களுக்குக் காரணம்
வழிந்த என் கண்ணீா் என்று தெரிந்தும்
இப்படிக்கு :
மறக்க முடியா உன்
நினைவுகளுடன்
மாதங்களை விரட்டும்
உன் மணாளன்.







