உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுபவர்களுக்கு விலாங்கு மீனை உதாரணமாகக் கூறுவார்கள். ஏனெனில் விலாங்கு மீன், மீனைக் கண்டால் வாலையும்
பாம்பைக் கண்டால் தலையையும் காட்டி தந்திரமாகத் தப்பித்துக்கொள்ளும். விலாங்கு மீன்கள்
பார்ப்பதற்குப் பாம்பு போன்று காணப்பட்டாலும் அவை மீனினத்தைச் சேர்ந்தவையாகும். உருண்டையான, நீண்ட உடலமைப்பைக்
கொண்டிருக்கும் இவை “அங்குயிலிபோமர்ஸ்
Anguilliform” என்ற விலங்கியல் பட்டியலில்
உள்ளடக்கப்படுகின்றன.
விலாங்கு மீன்களின் மேற்புறம்
கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும் வயிற்றுப் பகுதி மஞ்சல் நிறத்திலும் இருக்கும்.
தலைப்பகுதி பாம்பினது முக சாயலை ஒத்திருக்கும் வால் பகுதி மீனின் வாலை ஒத்திருக்கும்.
மிகக் குறைந்த அளவில் இவற்றின் உடலில் செதில்கள் காணப்படும். அத்தோடு சுவாசிப்பதற்கான
செதில்களும் முகத்தின் இரு மறுங்கிலும் காணப்படுகின்றன. விலாங்கு மீன்கள் 2.5 மீட்டர் நீளத்திற்கும்
20 கிலோ கிரேம் நிறை
கொண்டும் வளரக்கூடியன.
விலாங்கு மீன்கள் ஆழமற்ற கடல்
பகுதிகளிலும் மணல், சகதி நிறைந்த இடங்களிலும்
பாறைகள் மற்றும் பவளப்பாறைகளின் இடுக்குகளிலும் அதிகமாக வாழ்கின்றன. அத்தோடு ஆறு, குளம், ஏரி போன்ற இடங்களிலும்
வாழ்கின்றன. இவை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரினமாகையால் நீரில்லாதபோது சேற்றில்
நீண்ட நாட்களுக்கு உணவின்றி வாழவும் முடியும். விலாங்கு மீன்களில் 800 வகை இனங்கள் இருப்பதாகக்
கண்டறியப்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவின் அமேசன்
மற்றும் அதன் கிளை ஆறான ஒரினோகோ (Orinoco) ஆற்றுப் பகுதிகளில்
“எலக்ட்ரோபோரஸ் எலக்ட்ரிக்கஸ்” என்ற ஒரு வகை விலாங்கு
மீன்கள் காணப்படுகின்றன. இவை தமது உடலிலிருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்து பாய்ச்சி
அடிக்கும் அற்புத ஆற்றல் கொண்டவை. இவை இலக்ட்ரிக் ஈல்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன.
பொதுவாக எமது மின் கம்பங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் சாதனங்களின் அருகில் “அபாயம் 440 V மின்சாரம்” என அபாயக் குறியீடுகளைத்
தொங்கவிட்டிருப்பார்கள். ஆனால் இவ்வகை விலாங்கு மீன்கள் தமது உடலிலிருந்து 650 V மின்சாரத்தை உற்பத்தி
செய்கின்றன. இறை வல்லமையை உணர்ந்துகொள்வதற்காக அல்லாஹ் இப்படைப்பில் இத்தகையதொரு அத்தாட்சியை
எமக்குக் காட்டுகின்றான்.
இவற்றின் பயங்கரமான மின் ஆற்றல்
பெரியதொரு குதிரையைக் கூட 6 மீட்டர் தூரத்திற்குத்
தூக்கி எறியும் ஆற்றல் கொண்டதாகும். உடலில் பட்டதும் மனிதர்களைக் கூட கொன்றுவிடும்
பயங்கர மின்னாற்றல் இவற்றிடம் காணப்படுகின்றது. விலாங்கு மீன் எப்போதும் அதன் மின்னாற்றலைப்
பயன்படுத்துவதில்லை. உணவைப் பற்றுவதற்காகவோ அல்லது எதிரியிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவோ
எதிரியைக் கொல்வதற்காகவோதான் இவை தமது மின்னாற்றலைப் பயன்படுத்துகின்றன. தமது உணவின்
மீதோ அல்லது எதிரி விலங்கின் மீதோ மின்னாற்லை வெளிப்படுத்தியபடி மோதினாலே போதும் அது
இறந்துவிடும். அல்லது நீர் மின்னைக் கடத்தும் ஊடகமாதலால் தூரத்திலிருந்தே மின்னைப்
பாய்ச்சிக் கொன்றுவிடவும் இவற்றால் முடியும். இவை மற்றவகை மீன்கள், தவளைகள், பாசித் தாவரங்கள்
போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. அதோடு பழங்கள் மற்றும் விதைகளையும் இவை உண்கின்றன.
விலாங்கு மீனின் உடலின் உள்ளக
அமைப்பு மிகவும் விசித்திரமானது. அதன் மொத்த உடல் நீளத்தின் ஐந்தில் ஒரு பகுதியையே
அதன் உள்ளக உடல் உருப்புகள் கொண்டுள்ளன. அடுத்து எஞ்சியுள்ள பகுதி முழுமையாக மின்சாரத்தை
உற்பத்தி செய்வதற்கான உறுப்புக்களைக் கொண்டுள்ளது.
இவற்றின் மின்சார அமைப்பு
ஒரு மின்கழத்தின் (Battery) அமைப்பை ஒத்ததாகும்.
மின்கழத்தில் நேர் (+), மறை (-) மின் ஏற்றங்கள்
இருப்பதுபோன்று இவற்றின் உடலிலும் காணப்படுகின்றன. மின்சாரத்தின் சுற்று முழுமை பெற
நேர், மறை மின்னேற்றங்கள்
அவசியம். இவ்விலாங்கு மீனின் தலைப்பகுதி நேர்
ஏற்றமாகவும் வால் பகுதி மறை ஏற்றமாகவும் தொழிற்படுகின்றது.
இவற்றின் உடலில் இரண்டு வித்தியாசமான
வௌ;வேறு மின்சார உற்பத்தி
உறுப்புக்கள் அமைந்துள்ளன. ஒன்று சாக்ஸ் (Sacks). இவ்வுருப்பின் மூலம்
5 முதல் 10 வோல்ட் வரை மிகக்
குறைந்த மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனைப் பயன்படுத்தி தம்மைச் சூழ மின்சாரத்தை
அனுப்பி பிற விலாங்கு மீன்களுடன் தொடர்புகொள்ளவும் இடம்விட்டு இடம் நகரவும் இரையின்
இருப்பிடத்தைத் துப்பறியவும் செய்கின்றன. மற்றைய உறுப்பு பிரதான மின்கலத்தையும் (main battery) வேட்டை உறுப்பையும்
(hunter organ) கொண்டுள்ளது. இவ்விரண்டு பகுதிகளும் மின்சாரத்தை
சேமித்து வைக்கவும் அதை தேவையின்போது வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
வயது அதிகரிக்க அதிகரிக்க
விலாங்கு மீனிடம் காணப்படும் மின் ஆற்றலும் அதிகரிக்கின்றது. இவை உயிருடன் இருக்கும்போது
மட்டுமல்லாமல் இறந்து 10 மணி நேரங்களுக்குப்
பின்பும்கூட உடலில் சேமித்து வைக்கபடபட்டிருந்த மின்சாரத்தினால் மின் ஆற்றல் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்.
இதன்போது அதனை நெருங்கும் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படுகின்றது.
1938ம் ஆண்டு நியுயோர்க் உயிரியல் பூங்காவின் பொருப்பாளர் W.Coate மற்றும் நியுயோர்க்
பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர் R.T.Cox என்பவர்கள் இணைந்து மேற்கொண்ட சுவாரஷ்யமான ஆய்விலிருந்தே
விலாங்கு மீன்களிடம் மின் ஆற்றல் இருக்கும் விடயம் கண்டறியப்பட்டது. பூங்காவில் விலாங்கு
மீன்கள் வைக்கப்பட்டிருந்த தொட்டியில் 2 வோல்ட் நியோன் மின்குமிழை மறையேற்ற (நெகடிவ்) மின்கம்பியுடன்
இணைத்து மின்கம்பியை தொட்டியில் இட்டபோது அந்த மின்குமிழ் எரியத்துவங்கியது. இது அவ்வாய்வாளர்களைப்
பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
விலாங்கு மீனைப் பண்டைய காலத்து
மக்கள் புனிதமாகக் கருதியுள்ளனர். பண்டைய ரோமானியப் பேரரசர்கள் இவ்வகை மின்சார விலாங்கு
மீன்களைக்கொண்டு தமது எதிரிகளைக் கொலைசெய்துள்ளனர். இவை உயிரைப் போக்கும் சக்தியைக்
கொண்டுள்ளன என்று அறிந்திருந்தார்களே அன்றி இவற்றின் உடலில் உள்ள அபரிமிதமான மின்னாற்றலை
அவர்கள் அறிந்திருக்கவில்லை. ரோம அரசர்கள் தமது அரண்மனையைச் சூழ குளங்களை அமைத்து அவற்றில்
இவ்வகை விலாங்கு மீன்களையும் அதிகமாக வளர்த்துள்ளனர். அதேபோன்று குற்றமிழைத்தவர்களையும்
அரசியல் எதிரிகளையும் கட்டுப்படாத அடிமைகளையும் இக்குளத்தில் தள்ளி இவற்றின் மூலம்
கொலைத் தண்டனைகளை நிறைவேற்றியுள்ளனர் என்பதனை வரலாறு பதிவுசெய்துள்ளது.
ஆற்று நன்னீரில் வாழக்கூடிய
விலாங்கு மீன்கள் முட்டையிடும் பருவத்தை அடைந்ததும் கடலின் உப்பு நீரை நோக்கிப் பயணிக்கின்றன.
ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் இருக்கும் விலாங்கு மீன்கள் சர்காஸோ (Sargasso) கடலை நோக்கி பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து கடலின் மிக
ஆழத்தில் பாதுகாப்பான இடத்தில் முட்டையிட்டுவிட்டு மீண்டும் தாம் வாழுமிடத்தை நோக்கி
வந்துவிடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் லார்வா எனப்படும் குட்டி விலாங்கு மீன்கள்
வளைகுடா நீரோட்டத்தினோடு தங்களது பயணத்தை ஆரம்பிக்கின்றன.
இவை ஒரு வருடகாலமாக பயணித்து
வட அமெரிக்காவின் கடற்கரையையும் மூன்று ஆண்டுகளில் ஐரோப்பிய கடற்பகுதிகளையும் அடைகின்றன.
பின்னர் மீண்டும் இவை வளைகுடா நீரோட்டத்தினூடாகத் திரும்பி தங்கள் பெற்றோர் வாழும்
தென் அமெரிக்காவின் ஆற்று முகத்துவாரங்களை அடைகின்றன. இதன்போது இவை நன்கு வளர்ச்சியுற்றிருக்கும்.
குஞ்சுகளும் வளர்ச்சியடைந்து முட்டையிடும் காலமாகும்போது மீண்டும் கடல்பயணத்தை ஆரம்பிக்கின்றன.
இவ்வாறு விலாங்கு மீன்களின் வாழ்க்கைப்பயணம் சுழல்கின்றது.









